9 மாவட்டங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு... வாக்கு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு... 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 35 ஒன்றியங்களில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

9 மாவட்டங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு... வாக்கு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு... 

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், மொத்தம் 74 புள்ளி மூன்று ஏழு சதவீத வாக்குகள் பதிவாகின. 

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் ஆறாயிரத்து 652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.