” கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்த கூடாது” - அமைச்சர் கே.என்.நேரு
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளின் போது மாநகராட்சி மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் பணிகள் தாமதமாவதாக நீண்டகால புகார் உள்ளது.
இது குறித்து, மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்களும் புகார் எழுப்பியிருந்தனர்.
இதனை தொடர்ந்து, மாநகராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு கூறியதாவது:-
“ பருவமழை தொடங்க உள்ளதால் சென்னையில் நடைபெற்று வரும் முன்னுரிமை அளிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று பணிகள் உள்ளிட்டவைகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்து விடவும் குடிதண்ணீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக உள்ளாட்சி பணிகள் காலதாமதம் ஆகாமல் இருக்க அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் இணைந்து மண்டல வாரியாக வேலைகளை இணைந்து செய்ய வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்த கூடாது.
ஆனால் சில தனியார்கள் அனுமதி பெறாமல் பணிகளை மேற்கொள்ளும்போது மனிதர்களை ஈடுபடுத்துவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் நடக்கிறது. இதனை அரசு தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
இதையும் படிக்க | ” ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என யாரையும் வற்புறுத்த இயலாது” - சென்னை உயர் நீதிமன்றம்