குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை திறப்பு...!

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் உருவச்சிலையை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா்.

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் கடந்த 1869-ம் ஆண்டு நவம்பா் 15-ம் தேதி பிறந்தார். தூத்துக்குடி நகராட்சி தலைவராக 1909 -ம் ஆண்டில் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளாா். 

இதையும் படிக்க : குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு... !

1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார். இதனால் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார். 

அவரை போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.