மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன்...!!

நாகை அருகே 25 கிலோ எடை கொண்ட  கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனையானது.

மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன்...!!

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஜீவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வலையில் மருத்துவ குணம் வாய்ந்ததும், தங்கத்தை போல் விலை மதிக்க கூடியதுமான கூறல் மீன் எனப்படும் கத்தாழை மீன் ஒன்று சிக்கியது.  

இது குறித்த தகவல் அறிந்த வியாபாரிகள் காலையில் இருந்தே கத்தாழை மீனை வாங்க நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். 25 கிலோ எடை கொண்ட அந்த கத்தாழை மீன் ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது.

இந்த கத்தாழை மீன் குறித்து மீனவர்கள் கூறுகையில், 


கோடியக்கரைக்கு தென்கிழக்கே தான் இந்த  வகையான கத்தாழை மீன்கள் கிடைக்குமாம், மீனவர்கள் வளையில் மிகவும் அரிதாக கிடைக்கக்கூடியதும், விலைமதிக்க கூடியதுமான இந்தவகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுமாம்.

இந்த வகை கத்தாழை  மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்குமாம். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த நெட்டி மூலம் மீன்கள் ஆபத்து காலத்தில் ஒரு வகையான ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் இந்த நெட்டியானது ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆண்மை தன்மைக்கு அருமருந்தாகவும் சொல்லப்படுகிறது. இந்த  மீன் இறைச்சி கிலோ ரூ. 500-க்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகமாம். எனவே  இந்த வகையான மீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவை வலைகளில் சிக்குவது, பேரதிஷ்டம் எனவும் நாகை மீனவர்கள் வியப்புடன் தெரிவிக்கின்றனர்.