வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை அரசு வெளியிட்டது!

வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை அரசு வெளியிட்டது!

தமிழகம் முழுவதும் 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 16 லட்சத்து 80 ஆயிரத்து 160 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 27 லட்சத்து 98 ஆயிரம் பேரும் பதிவு செய்து உள்ளனர். 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 32 ஆயிரத்து 232 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...!

மேலும், 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 128 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 780 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர். 

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 75 ஆயிரத்து 153 பேரும், பெண்கள் 38 ஆயிரத்து 779 உள்பட 1 லட்சத்து 13 ஆயிரத்து 932 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 379 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 5652 பேர் உள்பட 18 ஆயிரத்து 031 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

செவித்திறன் சவால் உடையோர் மற்றும் பேசுவதற்கு சவால் உடையோர் ஆண்கள் 9 ஆயிரத்து 535 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 553 பேர் உள்பட 14 ஆயிரத்து 088 பேர் பதிவு செய்துள்ளனர்..

அதேப்போல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 788 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 39 ஆயிரத்து 414 நபர்கள் என மொத்தம் 65,71,300 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.