ஆலங்குடி மூக்கம்பட்டி பாப்பான்குளம் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி.. வாடிவாசலில் இருந்து சீறிய காளைகள!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
ஆலங்குடி அடுத்த மூக்கம்பட்டியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பாப்பான்குளம் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில் மதுரை, சிவகங்கை, பரமக்குடி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அடக்கினர்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசு ,தங்கம், வெள்ளி காசுகள், உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேபோல் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி கிராமத்தில் பராசக்தி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 56 வது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட காளைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்க, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு துள்ளி எழுந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்கிய காட்சியை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கைதட்டி கண்டு ரசித்தனர்.