மாநில கல்விக்கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகல்...! அகில இந்திய கல்விப் பாதுகாப்பு குழு கண்டனம்...!!

மாநில கல்விக்கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகல்...! அகில இந்திய கல்விப் பாதுகாப்பு குழு கண்டனம்...!!

மாநில கல்விக்கொள்கை வகுப்பு குழுவிலிருந்து பேராசிரியர் லெ.ஜவகர் நேசன் விலகுவதற்கு காரணமாக இருந்த சம்பவங்களுக்கு அகில இந்திய கல்விப் பாதுகாப்பு குழு  கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்குழவின் தலைவர் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய கல்விக்கொள்கை 2020 க்கு தமிழக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இதனை மறுப்பதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக உயர்மட்ட கமிட்டியை அமைத்தது. தமிழக மக்கள் மட்டுமல்லாது நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்கள் தமிழக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை மனதார வரவேற்றனர்.

ஆனால் இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற என்இபி 2020 ல் கூறப்பட்ட திட்டங்களை தமிழக அரசாங்கம் அமல்படுத்தத் தொடங்கியதுமே அதன் நோக்கம் தெரிந்துவிட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பும் எழுந்தது. தங்களது இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக திடீரென தமிழக கல்வி அமைச்சர்கள் ‘என்இபி 2020 இல் சில நல்ல அம்சங்கள்’ இருப்பதாக பேசத்தொடங்கினர்" என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் பின்னணியில் தமிழக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மாநிலக் கல்விக்கொள்கை வகுப்பதற்கான உயர்மட்ட கமிட்டியின் நடவடிக்கைகளில் அனைத்து நியதிகளையும் மீறி நேரடியாகவே தலையிட்டனர் என்ற செய்தி கடும் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள அவ்வறிக்கை சர்வதேச அளவில் போற்றப்படும் கல்வியாளரும் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கும் கமிட்டியின் உறுப்பினருமான பேராசிரியர் ஜவகர் நேசனை என்இபி 2020 ல் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு மாநில கல்விக் கொள்கையை வகுக்கவேண்டும் என்று மிரட்டினர் என்று செய்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. 

தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகபூர்வ, மதச்சார்பற்ற, விஞ்ஞானபூர்வ கல்வியை உயர்த்திப்பிடிக்கும் பேராசிரியர் ஜவகர் நேசன் போன்ற கல்வியாளர்களை கொண்ட மறுசீரமைக்கப்பட்ட புதிய உயர்மட்டக் கல்விக் குழுவை உருவாக்கி அதன் மூலம் தமிழக மக்களின் நியாயமான விருப்பங்களுக்கு ஏற்றவாறு செயல்படவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிக்க:உரிய அனுமதி இன்றி நீர்த்தேக்கம்...! ஆந்திர அரசுக்கு 100 கோடி அபராதம்...!!