கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி...சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு  உறுப்பினர் கல்யாணராமன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி...சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

தமிழக பாஜ செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கடந்த 16 ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார்  கல்யாணராமனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

அவருக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்

இதற்கிடையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள  கல்யாணராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்