கந்த சஷ்டி கோலாகலம் - விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!

தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி என ஆறு நாட்கள் முருக பெருமானுக்கு  விரதம் இருந்து வணங்கி நம்முடைய உடம்பிலும் மனதிலும் உள்ள தீய எண்ணங்கள், கெட்ட சக்திகளை அளிப்பதற்காகவே இருக்கும் விரதம்தான் கந்த சஷ்டி விரதம். அதன்படி, மதுரை  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். வருகிற 18-ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், முன்னதாக உற்சவமூர்த்திகளான சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானைக்கு பால், சந்தனம், சீயக்காய், தயிர். பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் வழிவிடும் முருகன் கோயில் 56வது ஆண்டு கந்த சஷ்டி பெருவிழா இன்று அதிகாலை காப்பு கட்டுடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கணபதி பூஜையுடன், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் வழி விடு முருகனுக்கு சந்தனம் பால், தேன், பன்னீர் என 21வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆறு நாட்கள்  நடைபெறும் இவ்விழாவில் தினமும் வழிவிடு முருகனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் செய்யப்படும்.  மாலை சண்முகர் அர்ச்சனை,ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும்.

இதையும் படிக்க : 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள  வென்னிமலை முருகன் கோவியில் கந்த சஷ்டி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.. வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி 19ந்தேதி வரை நடைபெறவுள்ளது.  இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமமும் கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து,கோவில் கொடிமரத்திற்கும் புனித நீர் ஊற்றி,சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடி ஏற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது, கந்தசாமி கோயில் ஐப்பசி மாத கந்த சஷ்டி பேருவிழா இன்று அதிகாலை 5:30 மணி அளவில் கோயில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வெகு விமரிசையாக தொடங்கியது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து. 18ஆம் தேதி சூரசம்ஹாரம், 19ஆம் தேதி முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.