கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை : நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கருணாநிதி சிலை வைக்க அனுமதி வழங்கப்படவில்லை : நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்றும், அனுமதி பெற்று வைக்கப்பட்ட தலைவர்களின் சிலைகளைச் சுற்றி பூங்கா அமைத்து பராமரிக்கவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் அவருக்கு கடிதம் எழுதிய திருப்பூரை சேர்ந்த திருமுருக தினேஷ், திருப்பூர் ரெயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நிகழும் பகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை வைக்க திட்டமிடப்படுவதாகவும், இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது எனவும் கூறியிருந்தார்.

ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இந்த கடிதத்தை இணைத்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், கருணாநிதி சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா? என தமிழக உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணையில் விளக்கம் அளித்துள்ள அரசு தரப்பு, கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் அளித்த விண்ணப்பத்தை, கடந்த செப்டம்பர் 15-ம் தேதியே மாவட்ட ஆட்சியர் நிராகரித்து விட்டதாக கூறியுள்ளது.