கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : கேரளாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார்...!

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : கேரளாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார்...!

கலாஷேத்ரா  பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வரும் தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள ருக்மணி தேவி கலைக் கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த கேரள மாநில மாணவி ஒருவர் நடன உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பாலியல் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், பேராசிரியர் ஹரி பத்மன் வார்த்தை ரீதியாகவும் பல்வேறு வகையிலும் பாலியல் தொந்தரவு அளித்ததோடு பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அவருடைய அறைக்கு அழைத்ததாகவும் கூறியிருந்தார்.

இதையும் படிக்க : ஐபிஎல் ரசிகர்களை அள்ளும் சென்னை மெட்ரோ நிலையங்கள்...பிரமாண்ட திரையில் ஒளிபரப்பா?

இதையடுத்து புகாரின் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது  இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அடையாறு மகளிர் போலீசார், புகாரளித்த மாணவியுடன் படித்த மூன்று மாணவிகளிடம் விசாரணை நடத்த கேரளா சென்றுள்ளனர். இதனிடையே, கலாஷேத்ராவில் பணிபுரியும் அலுவலர்கள் பேராசிரியர்கள் ஆகியோரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், புகார் தொடர்பாக அப்போது பணியாற்றிய துணை இயக்குனர் மற்றும் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனிடம், விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கலை நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றுள்ள பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்வது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.