விஷவாயு தாக்கி 2 பேர் பலி... தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது பரிதாபம்... 

சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

விஷவாயு தாக்கி 2 பேர் பலி... தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது பரிதாபம்... 

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலு (59). இவர் புதிதாக அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்பாபு(33) என்பவரிடம் நீண்ட மாதங்களாக மூடப்பட்டு கிடந்த தண்ணீர் தொட்டியை (சம்ப்) சுத்தம் செய்ய வேலைக்கு ஆட்கள் தேவை எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து ராஜ்பாபு  திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (40),  திப்பு சுல்தான்(25) ஆகியோரை வேலைக்கு அனுப்பி வைத்தார். நேற்று பாலு வீட்டின் தண்ணீர் தொட்டியை இருவரும் சுத்தம் செய்ய திறந்த போது விஷவாயு தாக்கி 2 பேரும் மயங்கி விழுந்தனர். அருகில் வசிப்பவர்களும், வீட்டின் உரிமையாளர் பாலுவின் உறவினர்களும் ஓடி வந்து மயங்கி விழுந்த 2 பேரையும் மேலே தூக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

ஆனால் முத்துகிருஷ்ணன், திப்பு சுல்தான் ஆகியோர் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 2 பேரின் உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு வீட்டின் உரிமையாளர் பாலு, காண்டிராக்டர் ராஜ்பாபு ஆகியோரை சூளைமேடு போலீசார் கைது செய்து பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.