பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம் - சீமான் கண்டனம்!

பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம் - சீமான் கண்டனம்!

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில், 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அதற்கு ஒப்புதல் தரக்கோரி மத்திய சுற்றுச் சூழல் மதிப்பீட்டு குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்தது. 

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள சுற்றுச்சூழல் நிபுணர் குழு, ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்த கூடாது உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. 

இதையும் படிக்க : கலைஞரின் பேனா நினைவு சின்னம்... ! சுற்றுசூழல் நிபுணர் குழு அனுமதி...!!

இந்நிலையில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல் என்றும், சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை மத்திய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும், மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.