விடுதியில் நடமாடும் மர்ம நபர்கள்.. அரைகுறையாவா? "We Want Safety" - மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள, மாணவியர் விடுதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி பல்கலைக்கழக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவியர் விடுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாணவியர் விடுதிக்கு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் உள்ளே சுற்றி திரிவதாக கூறி, அங்கு தங்கியுள்ள மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் மாணவியர் விடுதிக்குள் புகுந்த 5 மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அதில் ஒருவர் நிர்வாணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதனை கண்டித்து பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் மாணவிகளை சமாதானப்படுத்தி மீண்டும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமர வைத்தனர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவிகளின் திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.