” இனி விதிமுறைகள் கடுமையாக வகுக்கப்படும்” - ரயில்வே ஆணையர்.

” இனி விதிமுறைகள் கடுமையாக வகுக்கப்படும்”  - ரயில்வே ஆணையர்.

இனி வரும் காலங்களில் மதுரை ரயில் தீ விபத்து போல் நடைபெறாத வண்ணம் உரிய விதிமுறைகள் கடுமையாக வகுக்கப்படும் என்று தெற்கு வட்ட  ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.  

மதுரை ரயில் தீ விபத்தின் போது காயமடைந்து ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் ஏழு பயணிகள் மற்றும் தப்பியோடிய இரண்டு சமையல் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம்  நேரில் விசாரணை மேற்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது என்ன மாதிரியான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும் என்று கூறினார்.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  கடந்த 14ஆம் தேதி 63 பயணிகளுடன் தென்னந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவிற்காக புறப்பட்ட ரயில் பெட்டியானது மதுரையில் நேற்று காலை ரயில்வே நிலையம் அருகே போடிலைன் யார்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது. 

அப்போது ரயிலில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றபோது சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி 9பேர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர் மேலும் 8 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தனர் 

இந்த நிலையில் தீ விபத்து தொடர்பாக இன்று காலை இரண்டாவது நாளாக ரயில்வே காவல்துறை தடவியல் நிபுணர்கள் குழுவினர் நேரில் சென்று ரயில் பெட்டியில் சோதனை நடத்தினர் 

அப்போது விபத்திற்கு காரணமான கூறப்படும் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டரின் பாகங்கள் கேஸ் அடுப்பின் பாகங்கள் சமையல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர் மேலும் விபத்துக்குள்ளாகிய ரயில் பெட்டியில் இருக்கை பகுதிகளிலும், மேற்கூரைகளிலும் சோதனை நடத்திய போது இருக்கை பகுதியில் பயணி கொண்டு வந்திருந்த பெட்டிகளில் இருந்து கட்டு கட்டாக எரிந்த நிலையில் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றினர் 

இதனிடையே ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி எம் சௌத்ரி மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பயணிகளிடம் இன்று காலை விசாரணை நடத்தினார். 

இதனை தொடர்ந்து நேற்று ரயில்பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது  தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து வந்த நிலையில் 2 சமையல் ஊழியர்களிடம் தனித்தனியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினார்.

முன்னதாக  சிகிச்சையில் இருந்த 7 பயணிகளிடம் பாதுகாப்பு ஆணையர் விசாரணை முடித்த நிலையில் 7 பேரும் விமான நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர். மேலும். அவர்களோடு சேர்த்து 28 பேர் மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து லக்னோ விற்கு புறப்பட்டு சென்றனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு ஆணையர் டி எம் சௌத்ரி
பேசியபோது :

” மதுரை ரயில் பெட்டி  தீ விபத்து குறித்து உரிய  விசாரணை நடைபெற்று வருகிறது. 
விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள்  மீது என்ன மாதிரியான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும்.   சம்பவம் தொடர்பாக கைது  குறித்த கேள்விக்கு அது தொடர்பாக காவல்துறையினர் தான் முடிவு செய்வார்கள் 
விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்தவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம்.

சுற்றுலா ரெயில் பெட்டிகள்  பயணிகள் ரெயில் பெட்டியில் இனி வரும் காலங்களில்  இதுபோல் விபத்து நடைபெறதா வண்ணம்,  உரிய விதிமுறைகளை கடுமையாக வகுக்கப்படும், இந்த விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதி எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது”, 
என்றார்

இதனையடுத்து ரயில் விபத்து நடைபெற்ற சம்பவ இடத்தில் ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் பெட்டியில் உள்ளே சென்று இருக்கைகள் மற்றும் விபத்து நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட்டு அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிக்க   | "அலட்சிய போக்கில் ரயில்வே நிர்வாகம்" சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு!