"ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம்... பன்மைத்தன்மையை சிதைத்து விடும்" அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

"ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம்... பன்மைத்தன்மையை சிதைத்து விடும்" அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

"ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட  அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம்  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-ஆம் சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டு வருகிறது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சட்ட ஆணையத்திடம் 15.07.2023 தனது கருத்துரையை தாக்கல் செய்தார். இதில், அனைத்து இன மக்களின் உரிமைகள் மற்றும் பெருமைகளை நிலைநிறுத்தும் வகையிலும், சமூகநீதி தழைத்தோங்கும் வகையிலும் தன்னுரிமையுடன் கூடிய தமிழ்ச் சமத்துவ சமுதாயத்தை அமைப்பது பாமக வின் நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய உன்னத நோக்கம் கொண்ட கட்சியால் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த  ஒரு மதத்தினரின்/சிறப்புப் பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது என குறிப்பிட்ட அவர், இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரின் திருமணங்கள், மண விலக்குகள், குழந்தைகளை தத்தெடுத்தல், சொத்துரிமை ஆகியவை தொடர்பாக தனித்தனியான சிவில் சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மதப்பிரிவினரின் பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப் பட்ட அத்தகைய சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதன் நோக்கம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை விட, சில பிரிவினரின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதாகவே தோன்றுவதாக குறிப்பிட்டுள்ள அவர்,  இதை பொறுப்புள்ள, மதச்சார்பற்ற கட்சி என்ற முறையில் பா.ம.க.வால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அவர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது என்றும்  அதன் காரணமாகவே பா.ம.க.வில் பொருளாளர் பதவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை எதிர்த்து போராடி வருகிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அதை எதிர்த்து பா.ம.க. போராடி வந்திருக்கிறது என குறிப்பிடுள்ள அன்பு மணி ராமதாஸ்,  2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் உட்பட பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும் கூட, பொது சிவில் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க எடுத்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட,‘‘பல மதங்களையும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்ட இந்திய நாட்டில் எல்லோருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டம் தேவையில்லை. ஒவ்வொரு பிரிவும் தத்தமது மத நம்பிக்கைகளை பின்பற்றும் வகையில் மாறுபட்ட சிவில் சட்டங்களை பின்பற்றுவது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இந்த உரிமை காக்கப்பட பாடுபடும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அன்புமணி, 2019 தேர்தலிலும் இதையே பா.ம.க. வலியுறுத்தியது. இதே நிலைப்பாடு இப்போதும் தொடருகிறது என உறுதி தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் 1998 முதல் 2004 வரை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்தது. அப்போதும் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான் கூட்டணிக்கு தலைமை வகித்த பாரதிய ஜனதாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்தக்கூடாது என்ற நிபந்தனையை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் சேர்க்கச் செய்ததாக நினைவு கூர்ந்த அவர், அதனடிப்படையில் தான் கூட்டணி அரசுக்கு பா.ம.க. ஆதரவு அளித்ததாக கூறியுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றியமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றதாகவும் ஆனால், அம்முயற்சி வெற்றி பெறவில்லை எனவும் நினைவு கூர்ந்த அன்புமணி ராமதாஸ், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகவும் வலிமையாக உள்ளது. இந்திய மக்களிடையிலான மத நல்லிணக்கம் அதை விட மிகவும் வலிமையாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட  இந்தியர்கள் அதை சிதைக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும்  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாமிய மக்களிடம் நடைமுறையில் இருந்த முத்தலாக் போன்ற வழக்கங்கள் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பறிக்கும் வகையில் இருந்தன எனவும் அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் முத்தலாக் முறையை ரத்து செய்தது என கூறியுள்ள அவர் அதேபோல், வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைக் குறிப்பிட்டு கருத்து கேட்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆம் பிரிவில், ‘‘இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,  உண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-ஆம் பிரிவு என்பது வழிகாட்டி பிரிவு தானே தவிர கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய பிரிவு அல்ல  எனவும் கூறியுள்ளார்.

தனி சிவில் சட்டங்கள் பெரும்பான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் தனித்தனியாக உள்ளன. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்கள்  காலம் காலமாக கடைபிடித்து வரும் திருமணம் தொடர்பான சடங்குகளையும் பொது சிவில் சட்டம் சிதைத்து விடும் என்பதை சட்ட ஆணையம் உணர வேண்டும் எனக்கூறியுள்ள அவர் பொதுசிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான  21-ஆம் சட்ட ஆணையம் விவாதித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டது. அதன் முடிவில் 185 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை 2018 ஆம் ஆண்டில் வெளியிட்டது எனவும் அதில், இன்றைய சூழலில் பொதுசிவில் சட்டம் தேவையும் அல்ல; விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ‘‘ஒருங்கிணைந்த நாடு என்பதற்காகவே அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. மதச்சார்பற்ற தன்மை என்பது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் பன்முகத்தன்மையுடன் முரண்பட்டதாக இருக்கக்கூடாது. கலாச்சார பன்முகத்தன்மை என்பதில் எந்த சமரசத்தையும் செய்து  கொள்ளக் கூடாது. ஒற்றைத் தன்மை அல்லது ஒரே மாதிரியான தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான வெறி தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தலாக மாறுகிறது’’ என்று 21-ஆம் சட்ட ஆணையம் அதன் அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவுக்குப் பிறகும், 4 ஆண்டு இடைவெளியில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை 22-ஆம் சட்ட ஆணையம் தொடங்கியிருப்பது சரியல்ல என அறிவுறுத்தியுள்ள அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும் என எச்சரித்துள்ளார். மேலும் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும்,  வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை  சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:மக்கள் பணத்தை கீரை போல கடைந்துண்ணும் அதிகாரிகள்; காரித் துப்பி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்!