விளையாட்டுத்துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு...!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியாணைகளை வழங்கினார். 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில், 17 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி, உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அத்துடன் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ், 3 வீரர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சியில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.