1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு... பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு...

வரும் 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு... பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு...

சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கேற்றவாறு முக கவசம் இருப்பதையும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள தொடக்க கல்வி இயக்ககம், மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து, வகுப்பறைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில், சுழற்சி முறையில் கற்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தொடக்க கல்வி இயக்ககம், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு, ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் முழு பொறுப்பு ஆவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணுகுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என கூறியுள்ள தொடக்க கல்வி இயக்ககம், மாணவர்களுக்கு தன் சுத்தம் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.