சசிகலாவிடம் பேசிய நபரின் கார் மீது குண்டுவீச்சு ... ஆர்.பி. உதயகுமார் தான் காரணம் என குற்றச்சாட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சசிகலாவிடம் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலாவிடம் பேசிய நபரின் கார் மீது குண்டுவீச்சு ... ஆர்.பி. உதயகுமார் தான் காரணம் என குற்றச்சாட்டு

ராமநாதபுரம் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்தவர் வின்செண்ட் ராஜா. இவர் பரமக்குடி அருகே உள்ள மேலக்காவணூர் பகுதியில் தார் பிளாண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகலாவிடம் போனில் பேசிய ஆடியோ வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது நிறுவனத்தின் காவலாளி விடுமுறை என்பதால், அவர் தனது காரை நிறுவனத்தில் நிறுத்திவிட்டு இரவு அங்கு தங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் வெடிசத்தம் கேட்டதையடுத்து, வெளியே வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் சிலர் அவரது சொகுசு கார் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தனது நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீசியதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தான் காரணம் என வின்சென்ட் தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இச்சம்பவத்தை நடத்தி உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.