மதுரையில் கட்டிடம் இடிந்து காவலர் உயிரிழந்த வழக்கு - உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது....!!
மதுரையில் கட்டிடம் இடிந்து காவலர் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய உரிமையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் கீழவெளிவீதி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்த விபத்தில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த மதுரை விளக்குத்தூண் காவல்நிலைய தலைமைக்காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில் காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
உடனிருந்த காவலர் கண்ணன் படுகாயங்களுடன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற கட்டிடம் உறுதியற்றதாக இருப்பதால் அதனை இடிக்க கோரி மதுரை மாநகராட்சி கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோட்டிஸ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மாநகராட்சியின் உத்தரவை மதிக்காமல் அலட்சியமாக செயல்பட்டது விபத்து மற்றும் உயிரிழப்புக்கு காரணம் என்ற புகாரின் கீழ் கட்டிடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், கடை வாடகைதாரர்கள் நாகசங்கர், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.