களைகட்டிய ஆயுதப்படை காவலர்களின் பொங்கல் கொண்டாட்டம்...
கோலப்போட்டி, உறியடி, மல்லர்கம்பம், கயிறு இழு போட்டி, நடன போட்டி என அசத்திய ஆயுதப்படை காவலர்களின் பொங்கல் கொண்டாட்டம்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அவரது மணைவி மம்தா ஷர்மா முன்னிலையில் பொங்கல் குலவையிட்டும், ஆணையருக்கு பரிவட்டமும் கட்டப்பட்டது. இதற்கு முன்னதாக காவலரின் குடும்பத்தினர் பொங்கல் செய்யும் இடத்திற்கு மரியாதை செய்யும் வகையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தனது ஷூவை கழட்டிவிட்டு வெறுங்காலுடன் நடந்து சென்றார்.
இதன் பின்பாக பெண் காவலர்கள் கண்ணைக் கவரும் வகையில் வரைந்த கோல போட்டியினை பார்வையிட்டு சிறப்பாக வரையப்பட்ட கோலத்திற்கு மதிப்பெண் வழங்கினார். இதன் பின்பாக உறியடி போட்டி நடத்தப்பட்டது இதில் ஆயுதப்படையைச் சேர்ந்த ஆண், பெண் காவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆண் காவலர்கள் வேஷ்டியிலும், பெண் காவலர்கள் சேலையிலும் போட்டியில் களம் இறங்கினர். இப்போட்டியில் உறிப்பாணையை அடித்து உடைத்து வெற்றி பெற்றார் பெண் காவலர் ஒருவர்.
இதன் பின்பாக மல்லர் கம்பம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆறு வயது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தங்களுடைய உடலை வில் போல வளைத்து கம்பத்தில் ஏறி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தனர்.இதன்பின்பாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் ஒன்றிணைந்து சிலம்பு கம்பை வாளுக்கு நிகராக காற்றில் சுழற்றினார். இசையோடு கலந்த சிலம்பம் அனைவரையும் கவர்ந்தது.
இதன் பின்பாக பெண் காவலர்கள் ஒன்றிணைந்து ஆடிய நடனத்தில் ஒட்டுமொத்த கூட்டமும் கண்டு களித்து துள்ளலான இசைக்கு அவர்களும் துள்ளி ஆடினார். இறுதியாக அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அவரது மனைவி மம்தா ஷர்மா பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.