"புதிதாக அரசியலுக்கு வந்துள்ள உதயநிதி, பழைய அரசியலை செய்கிறார்" பிரேமலதா விஜயகாந்த்!!

"புதிதாக அரசியலுக்கு வந்துள்ள உதயநிதி, பழைய அரசியலை செய்கிறார்" பிரேமலதா விஜயகாந்த்!!

கொசுவை ஒழித்து விட்டோம் டெங்குவை ஒழித்து விட்டோம் என்று உதயநிதி சொல்வது பெரிய விஷயம் இல்லை, வறுமை, லஞ்ச ஊழல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் விலைவாசி உயர்வு டாஸ்மார்க் கடைகளை ஒழிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமை ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் சனாதனத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. சனாதானத்தை ஒழிப்பதற்கு மாநாடு என்று சொல்கிறார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. கொசுவை ஒழித்து விட்டோம் டெங்குவை ஒழித்து விட்டோம் என்று உதயநிதி சொல்வது பெரிய விஷயம் இல்லை. வறுமை, லஞ்ச ஊழல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் விலைவாசி உயர்வு டாஸ்மார்க் கடைகளை ஒழிக்க வேண்டும், தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக இந்தியாவின் முதன்மை மாநிலமாக நமது தமிழ்நாட்டை கொண்டு வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம்" என பேசியுள்ளார்.

மேலும், "இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகள், முக்கியமாக திமுக அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கான அரசியலை திமுக செய்யவில்லை. தேர்தலுக்காக சனாதனம் என்று சொல்கிறார்கள். இதனால் நமக்கு என்ன பயன்?. இந்துக்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. தேர்தல் ஆதாயத்திற்காக சனாதானம் என்ற வார்த்தையை சொல்லி திமுக பிரிவை உண்டாக்குகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அதை செய்கிறார். இளைஞரான உதயநிதி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவரிடம் இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பழைய அரசியலை கையில் எடுக்கிறார். நூறாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் ஜாதி மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை செய்யவில்லை" என சாடியுள்ளார்.

மேலும், "மக்களின் ரத்தத்திலும் உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப் போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு நாட்டினுடைய பெயரை மாற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது" எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "வரலாற்றை மாற்றியெழுத முயற்சிக்கும் பாஜகவை மக்கள் தூக்கி எறிவர்" ராகுல்காந்தி!!