பைக் டாக்சியை தடை செய்யக் கோரி போராட்டம்....!

பைக் டாக்சியை தடை செய்யக் கோரி போராட்டம்....!

பைக் டாக்சியை தடை செய்யக் கோரி இன்று சென்னையில் நடந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.

அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர் அருகே இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டு பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிஐடியு மாநில செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் ஒரு அங்கமாக இருசக்கர வாகன டாக்ஸியை மதுரையில் மாவட்ட ஆட்சியர் சென்ற 14ஆம் தேதி தடை செய்தார். அந்த தடையை மீறுபவர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டது எனக் கூறினார்.  

மேலும், இதற்கு முரணாக சென்னை மெட்ரோ நிறுவனத்தில் 50 பெண்களைக் கொண்டு பைக் டாக்ஸியை அறிமுகப்படுத்தி உள்ளதை கண்டித்த அவர்  இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸியாக ஓட்டக்கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்து உள்ளதையம்  ஏற்கனவே டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த பைக் டாக்சியை தடை செய்தையும் சுட்டிக் காட்டினார்.

மேலும், இது போன்ற பயணங்களில் மக்களுக்கு எந்த வித பாதுகாப்பும்  இல்லை எனத் தெரிவித்த அவர் பைக் டாக்ஸியில் செல்பவர்களுக்கு காப்பீட்டு திட்டமும் செயல்படுத்த முடியாது எனக் கூறினார். தொடர்ந்து, லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்க்கையை பறிக்கும் வகையில் இருக்கும் இந்த பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று அனைத்து சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்த அவர் மேலும் எங்களது கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை ஆணையரை சந்தித்து அளிக்க உள்ளோம் எனக் கூறினார். மேலும் இந்த போராட்டமானது இந்த பைக் டாக்ஸி ஓட்டத்தை நிறுத்தும் வரை தொடரும் என தெரிவித்து உள்ளனர்.