மனைவியை கடத்திய சைக்கோ கணவன்!

மனைவியை கடத்திய சைக்கோ கணவன்!

மயிலாடுதுறையில் மனைவியைக் கடத்திச் சென்ற சைக்கோ கணவன் பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மாதத்துக்கு பிறகு நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளார். சென்னையில் இருந்த அவரை மயிலாடுதுறை போலீஸார் மீட்டு, தப்பியோடிய கணவனை தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான நான்கே மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

இந்நிலையில், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்த உமாமகேஸ்வரி, தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, குளோரோபார்ம்  கொடுத்து மயக்கமடைய செய்ததாகவும், தொடாந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்ததாகவும், பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்ததாகவும் தொடர்ந்து கணவனுடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைத்தனர். மேலும், உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதில் திருச்செந்தூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற ஒருவரை கைது செய்து அவர் மீது ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தப்பி ஓடிய சைக்கோ கணவன் மாரிமுத்துவை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:துணிக்கடை உரிமையாளரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு!