தனியார் சிமெண்ட் ஆலையால் பாதிக்கப்பட்ட பொது மக்கள்...! உதவிக்கரம் நீட்ட மறுப்பதால் போராட்டம்..!.

சிமெண்ட் ஆலை சுண்ணாம்புகல் குவாரியினால் ஊரையே காலி செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிமெண்ட் ஆலையும் உதவிக்கரம் நீட்ட மறுத்ததால், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் சிமெண்ட் ஆலையால் பாதிக்கப்பட்ட பொது மக்கள்...! உதவிக்கரம் நீட்ட மறுப்பதால் போராட்டம்..!.

பொதுமக்கள் அவதி :  

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் ஆலை சுண்ணாம்புகல் குவாரியினால் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஊரை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த குவாரியை தடை செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் சிமெண்ட் ஆலை : 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல வெங்கடேஸ்வரபுரம், சில்வர்பட்டி, கம்பத்துபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து, தனியார் சிமெண்ட நிறுவனம் ஒன்று நிலங்களை வாங்கியுள்ளது. அங்கு சிமெண்ட் தயாரிக்க தேவையான சுண்ணாம்புகல் எடுக்கும் குவாரிகளை அந்த நிறுவனம் அமைத்துள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அந்த குவாரியில் வெடி வைத்து சுண்ணாம்பு கல் எடுத்து வருவதால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படி வெடி வைத்து சுண்ணாம்பு கல் எடுக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் எல்லாம் சேதமடைந்துள்ளதாகவும், விவசாய பணிகள் செய்ய முடியாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீரின் சுவையும் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த காரணத்தினாலேயே பலரும் ஊரை காலி செய்து வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

100 குடும்பங்கள் வரை இருந்த கிராமத்தில் தற்போது 25 குடும்பங்கள் மட்டும் தான் இருப்பதாகவும், மற்றவர்கள் ஊரை காலி செய்துவிட்டு, வெளியூர்களில் பிழைப்பு தேடி சென்றுவிட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர். தனியார் சிமெண்ட் ஆலை குவாரியினால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தங்கள் கிராமத்திற்கு அந்த தனியார் சிமெண்ட நிறுவனம் எவ்வித உதவியும் செய்யவில்லை என்றும்  குற்றம்சாட்டியுள்ளனர். சுண்ணாம்பு குவாரியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிதி ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும், தனியார் சிமெண்ட் ஆலை நிறுவனம் தங்கள் கிராமத்திற்கு எவ்வித வளர்ச்சி பணியும் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். தற்போது வாழ்ந்து வரும் இந்த 25  குடும்பங்களாவது இந்த கிராமத்தில் வாழ வேண்டும் என்றால் தனியார் நிறுவனம் தங்கள் கிராமத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும், இல்லையெனில், அரசு அந்த குவாரியை தடை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அவற்றிற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

கிராம மக்கள் போராட்டம் : 

இந்நிலையில் அந்த தனியார் சிமெண்ட் ஆலை நிர்வாகத்தினை அக்கிராம மக்கள் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். தனியார் சிமெண்ட் ஆலை சுண்ணாம்பு கல் குவாரியினால் பல குடும்பங்கள் ஊரை விட்டு காலி செய்துள்ள நிலையில், மீதமுள்ள கிராம மக்களை காப்பாற்ற தேவையான அடிப்படை வசதிகளை தனியார் சிமெண்ட ஆலை நிர்வாகம் செய்ய வேண்டும் இல்லையெனில் போராட்டத்தை கையில் எடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கட்டிடம் கட்டி கொடுக்கும் தனியார் சிமெண்ட் ஆலை, அந்த ஆலையினால் பாதிக்கப்பட்ட தங்கள் கிராமத்திற்கு எவ்வித உதவிக்கரமும் நீட்டவில்லை என்றும் அவர்கள் வேதனை  தெரிவித்துள்ளனர்.