உயர்நீதிமன்றம் உத்தரவை திரும்ப பெற வேண்டும்...திருமாவளவன் மனு தாக்கல்...!

உயர்நீதிமன்றம் உத்தரவை திரும்ப பெற வேண்டும்...திருமாவளவன் மனு தாக்கல்...!

ஆர். எஸ். எஸ் ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதி உத்தரவை திரும்ப பெறக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுதாக்கல் செய்துள்ளார். 

நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி திருமாவளவன் மனுதாக்கல்:

ஆர். எஸ். எஸ் ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதியை  திரும்ப பெறக்கோரி திருமாவளவன் தாக்கல் செய்த அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை ஆர். எஸ். எஸ் பின்பற்றுவதாகவும், அந்த அமைப்பை சேர்ந்த கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்தபோது, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

மேலும் பாஜக விளம்பரத்துக்காக தங்களது வீடுகளின் முன் குண்டுகளை வீசி வருவதாகவும், ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும் என்றும் விளக்கியுள்ள அவர், விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடைபெறவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மத நல்லிணக்க ஊர்வலம்:

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்தும் அதே அக்டோபர் 2ம் தேதி,  தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆர். எஸ். எஸ். முயற்சிப்பதாகவும் மனுவில் திருமாவளவன் சாடியுள்ளார். 

இதையும் படிக்க: காங்கிரஸை வீழ்த்துமா குலாம் நபியின் ஜனநாயக ஆசாத் கட்சி...!

தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை தடை செய்ய வேண்டும்:

நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர். எஸ். எஸ் திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஆர். எஸ். எஸ் அணிவகுப்புக்கு  வழங்கப்பட்ட  அனுமதியை திரும்ப பெற வேண்டும் எனவும்,  செப்டம்பர் 28ம் தேதிக்குள் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.