ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் : ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் : ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17 ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக களமிறங்கினர்.

இதற்காக மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சுமார் 600 பேரின் செல்போன் எண்களை குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் போலிசாரின் வாகனத்தை கண்டு தப்பியோட முயற்சித்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.   

இந்நிலையில்  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.