முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா...
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று மதுரை கோரிபாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சசிகலாவிற்கு வழிநெடுகிழும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு சென்ற சசிகலா, முத்துராமலிங்க தேவரின் 59வது குரு பூஜை விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதன் தொடர்ச்சியாக பசும் பொன்னில் உள்ள தேவரின் நினைவு இல்லத்திற்கு சென்ற சசிகலா சிறிது நேரம்“ அமர்ந்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். அத்துடன் அங்கிருந்த நினைவு இல்ல பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்ததுடன் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.