"எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் சந்திக்க தயார்" அமைச்சர் செந்தில் பாலாஜி!
எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் சந்திக்க தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. அதேபோல கோவை ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நேற்று நடந்தது.
இந்த நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும், ஆயிரம் வருமான வரி சோதனைகள் வந்தாலும் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தொிவித்தாா். கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணியை செய்ய விடாமல் யாரும் தடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என விமர்சித்துள்ளார்.
முன்னதாக கரூரில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய கூடைப் பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?