அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்... போக்சோவில் அதிரடி கைது!

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த ஆசிரியர்... போக்சோவில் அதிரடி கைது!

சென்னையில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வேதியியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகப்பேர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றியவர்  ஸ்ரீதர். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நலபாதுகாப்பு அதிகாரி கஸ்தூரியிடம் புகார் அளித்தனர். 

இதனையடுத்து குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் ஸ்ரீதரிடம் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  விசாரணை நடத்தினார். இதில் பாலியல் அத்துமீறலில் ஸ்ரீதர் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து அவர்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வேதியியல் ஆசிரியரான ஸ்ரீதர் ராமசாமியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக பள்ளி முன்பு கூடிய அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் ஆசிரியர் ஸ்ரீதருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்  முகப்பேர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.