”கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” - விவரங்கள் உள்ளே..! .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளி மற்றும் வேத ஆகம பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருக்கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டவும், இறைவனுக்கு ஆற்றும் சேவையில் அனைவருக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நிறைவேற்றிடும் வகையிலும், உரிய பயிற்சிகள் வழங்கிடவும் பல்வேறு கோயில்களில் பயிர்சி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, பல்வேறு பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்படும் திருக்கோயில்களின் விவரம் பின்வருமாறு :-
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்:-
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்,
திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், மற்றும்
ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில்.
ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள்:-
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்,
சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்.
தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிக்கான பகுதி நேரம் மற்றும் முழு நேர பயிற்சிப் பள்ளி :-
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மற்றும்
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.
பிரபந்த விண்ணப்பர் பயிற்சி பள்ளி :-
ஸ்ரீவில்லிப்புத்தூர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில்.
வேத ஆகம பாடசாலைகள்:-
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் மற்றும்
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
மேர்கண்ட பயிற்சிகள் முறையே அந்தந்த கோயில்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/- மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ. 1500/- வழங்கப்படுகிறது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 24 வயதிற்குள்ளும், ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 20 வயதிற்குள்ளும், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 13 முதல் 16 வயதிற்குள்ளும் அதோடு, 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வேத ஆகம பாடசாலையில் சேர வயது வரம்பு 12 முதல் 16 வயதிற்குள்ளும் மற்றும் பிரபந்த விண்ணப்பர் பயிற்சிப் பள்ளியில் சேர வயது வரம்பு 8 முதல் 18 வயதிற்குள் இருப்பதோடு 5 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த திருக்கோயில்களின் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது அந்தந்த திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். இப்பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கொடநாடு வழக்கு: "விசாரிக்காத தமிழக அரசு" ஆர்பாட்டம் நடத்தும் ஓபிஎஸ்!