திடீரென தீ பிடித்து எறிந்த கார்.. நூலிழையில் தப்பிய உயிர்கள்.. தஞ்சையில் பெரும் பரபரப்பு!!
தஞ்சையில் ஓடும் கார் திடீரென தீ பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்தவர் அசார். சாப்ட்வேர் என்ஜினீயர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் கணபதிநகர் அருகே சென்ற போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென அதிக அளவு புகை வந்தது. உடனடியாக அசார் காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்தவர்களை இறங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அனைவரும் காரில் இருந்து இறங்கிய உடன்.. அசார் காரின் முன்பகுதியை திறந்து பார்த்துள்ளார். பார்த்து கொண்டிருந்த பொது திடீரென காரில் முன்பகுதி தீ பிடிக்க தொடங்கியது.
இது குறித்து உடனே தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் அருகில் இருந்த வங்கியில் இருந்து தீயணைக்கும் கருவியை எடுத்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
தக்க நேரத்தில் காரை விட்டு அனைவரும் இறங்கியதால் 5 பேரின் உயிர் தப்பியது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.