10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை....!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை....!!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.


அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யபப்ட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வில்  விசாரணை நடைபெற்ற போது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதால்,

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பிற வகுப்பினருக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். மேலும் இது அரசியல் ஆதாயத்துக்காக தேர்தலை கணக்கில் வைத்து இயற்றப்பட்ட சட்டமாகும், எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வாதங்களை ஏற்காத நீதிபதிகள்,முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் உள் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், எனவே, வன்னியர்களுக்கு10. 5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, பாட்டாளி மக்கள் கட்சி, ராமதாஸ் , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மேல்முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மேலும் தமிழக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீடு மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வு முன்பு, 10.5% உள் ஒதுக்கீடு மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க கோரி தமிழக அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து வழக்கானது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ், பிஆர் காவாய் மற்றும் நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க பட்டியலிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.