பள்ளிக்கு 50 அடி தூரத்தில் டாஸ்மாக்.. உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கு அருகில் மதுபான கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கு 50 அடி தூரத்தில் டாஸ்மாக்.. உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை மாவட்டம் தென்னம்பாளையத்தில் பொது மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் திறக்கப்பட உள்ளதாகவும், அந்த இடத்திற்கு 50 அடி தூரத்திலேயே பள்ளி அமைந்துள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் அமைக்கவேண்டும் என்ற விதி மீறப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.