" போதை போன்ற தவறான வழியில் மாணவர்கள் செல்வதை தடுக்க ஆசிரியர்கள்....." - அமைச்சர் பி.கீதாஜீவன்

நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இன்றைய மாணவர்கள் போதை போன்ற தவறான வழியில் செல்வதை தடுக்க ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு ஐந்து நிமிடம் அறிவுரைகள் வழங்குங்கள் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கூறியுள்ளார்.

" போதை போன்ற தவறான வழியில் மாணவர்கள் செல்வதை தடுக்க ஆசிரியர்கள்....." - அமைச்சர் பி.கீதாஜீவன்

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருப்புமுனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன், 385 மாணவிகளுக்கு ரூ.19லட்சத்து 21ஆயிரத்து 920, மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் சாருஶ்ரீ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பெண்களை பாதுகாப்பதற்காக தொடர்ந்து பல நடவடிக்கைகளை, இந்த அரசு எடுத்து வருகிறது. குழந்தை திருமணங்கள் கட்டுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களின் எண்ணிக்கை எட்டு சதவீதமாக உள்ளது. இதனை கட்டுபடுத்த வேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்களை படிக்க வைப்பது மட்டும் நோக்கமாக கொள்ளாமல், அவர்களை நல்வழி படுத்த வேண்டும். மது அருந்துவது தெரிந்த உடனே அந்த மாணவனை நல்வழிபடுத்த உரிய ஆலோசனைகளை வழங்குங்கள் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், மாணவர்கள் ஒழுக்கமில்லாமல் வெறும் படிப்பை வைத்து என்ன செய்ய முடியும் எனவே மாணவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அவர்களுக்கு ஆலாசனைகள் கொடுங்கள். மதுவிலிருந்து மீளமுடியும், கஞ்சா போன்ற போதையிலிருந்து மீள முடியாது. எனவே மாணவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள் எனவும் கூறியுள்ளார். 18 வயதுக்கு முன்பாக குழந்தை திருமணம் செய்வதை தடுக்க ஆலோசனை வழங்குங்கள் என்றும் பேசியுள்ளார்.