நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்...! சபாநாயகர் அப்பாவு...!!

நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்...! சபாநாயகர் அப்பாவு...!!

கிடப்பில் போடப்பட்டுள்ள நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்த முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் கடந்த 2000ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது 2,100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தொழில் நுட்ப பூங்கா திட்டம் அதன் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. 

பின்னர் கடந்த 2006ம் ஆண்டில் மீண்டும் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது இதனை விரிவு படுத்தும் பொறுப்பு ஆந்திராவை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் தொழில் நுட்ப பூங்கா திட்டத்தை செயல்படுத்தாமல் இந்த நிலத்தை அடமானம் வைத்து அதன் மூலம் 855 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் தற்போது இங்கு 9 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. 

மேலும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தொழிற்சாலைகள் தொடங்கப்படாமல் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு இன்று நாங்குநேரி தொழில் நுட்ப பூங்காவை பார்வையிட்டார். அப்போது அங்கு செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். அதனைதொடர்ந்து தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ‘நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இதுபற்றி முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.