நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால், விபத்து காலங்களில் 'ஏர் பேக்' செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுவதாகவும் கூறி, நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பம்பர் இருப்பதால் விபத்துகளின் போது ஏர் பேக் செயல்படுவதில்லை என்பதற்கு, அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், மத்திய அரசின் உத்தரவை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.