மயானங்களை முறையாக சுத்தப்படுத்த வேண்டும்... உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...
மயானங்கள் பராமரிப்பு குறித்து தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் 3 மயானங்கள் ராஜூஸ் இன மக்களுக்காக உள்ளன. அவை முறையாக பராமரிக்கப்பட்டு, தேவையான வசதிகளுடன் உள்ளன. இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் அவர்களை இந்த மயானத்திற்குள் தகனம் செய்ய அனுமதிப்பதில்லை.
மேலும் நகராட்சியில் 6 தனியார் மயானங்கள் உள்ளன. அவற்றில் 4 நகராட்சி பதிவேட்டில் குறிப்பிடப்படாமலேயே இயங்கி வருகின்றன. ஆனால் நகராட்சி ஊராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான மயானங்கள் உரிய பராமரிப்பு, அடிப்படை வசதிகளும் செய்வதில்லை. குறிப்பாக எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் உடல்களின் பதிவேடுகள் கூட முறையாக பின்பற்றுவதில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் இது தேவையற்ற விளைவுகளை உருவாக்கும்.
ஆகவே, மயானங்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் விதமாகவும், அடிப்படை வசதிகளுடம் தூய்மையாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு, மயானங்களை முறையாக சுத்தப்படுத்த வேண்டும் அங்கு அடிப்படை வசதிகளுடன் தண்ணீர் வசதி ,மின்சாரம், உள்ளிடவைகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் மயானங்கள் பரமரிப்பு குறித்து நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.