கச்சத்தீவை மீட்க வழக்கு! நீதிமன்றத்தின் பதில்...

கச்சத்தீவை மீட்க வழக்கு! நீதிமன்றத்தின் பதில்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மீட்கவும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய உடன்படிக்கையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மீனவர்கள் நலன் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். 

அதில், "இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1974ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எந்த இடையூறும் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. 

1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என RTI தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு வரை 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 19. 06.2023ல் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர். தற்போது 21. 06.2023 ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை  செய்து கொண்ட உடன்படிக்கையினை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர். எனவே, இடைக்கால உத்தரவாக 22 மீனவர்களை இந்தியா கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், மேலும், 1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை என இரு நாடுகளுக்கு இடையேயான செய்யப்பட்ட உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார், கங்கா பூர்வாலா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாகி நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில், இந்திய மீனவர்கள் ஜூலை 5ஆம் தேதி வரை இலங்கையிலுள்ள நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு தேவையான சட்ட ரீதியான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, நீதிபதிகள், 1974ல் இந்தியா - இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க:"சீட் பங்கீட்டில், நாட்டிற்காக எவ்விதத் தியாகத்தையும் செய்ய தயார்" ராகுல் அறிவிப்பு!