நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை...!!
இன்று ரமலான் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு மாத காலம் புனித நோன்பு இருந்து தியாகம், அறம் போன்ற உயரிய நெறிகளைக் கடைப்பிடித்த இஸ்லாமிய மக்கள், இன்று உற்சாகத்துடன் ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
ரமலான் பண்டிகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகுற காட்சியளிக்கின்றன. காலையிலிருந்தே பள்ளி வாசல்கள் முன் திரளும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பள்ளி வாசலில் கூடிய ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். அத்துடன் ஒருவருக்கொருவர் வாழத்துக்களை கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.
புத்தாடை அணிந்தும் இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நாளின் முக்கிய நிகழ்வான பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரமலான் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பிரியாணி சமைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஈத்காவில் பல்லாயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். அப்போது ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதேப்போன்று, ரம்ஜான் பண்டிகையான இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள மாஹிம் தர்காவில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேப்போன்று, டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.