செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் டவரின் மேல் ஏறிய போதை ஆசாமி...

கரூரில் தனது செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக மதுபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் டவரின் மேல் ஏறிய போதை ஆசாமி...

கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார்  இரும்புக் கடையில் வேலை செய்து வருபவர் இளங்கோ. புத்தாண்டு தினத்தன்று இவர் மது போதையில் தனது செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்று காரணத்திற்காக அவர் வேலை செய்துவரும் கடை அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு மேலுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி உள்ளார். 

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் கரூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

திடீரென்று மழை பெய்ய துவங்கியதன் காரணமாக செல்போன் டவரில் ஏறிய நபர் கீழே இறங்கினார். தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து கரூர் நகர போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு இளங்கோவை அழைத்துச் சென்றனர். மதுபோதையில் தனது செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக இளைஞர் செல்போன் டவரில் ஏறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.