அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை- கதிகலங்கி போன பயணிகள்..

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை- கதிகலங்கி போன பயணிகள்..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி ஓட்டுனர்கள் கரும்புகளை யானைகள் உண்பதற்கு வனப் பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர்.

கரும்புகளை சுவைத்து பழக்கப்பட்ட யானைகள் மீண்டும் அதே இடத்தில் கரும்பு கிடைக்கும் என ரோட்டோரமாக வந்து  நிற்கின்றன. இதற்கிடையே இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லக்கூடிய அரசுப் பேருந்தை திடீரென தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த ஒற்றை காட்டு யானை வழி மறித்தது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். சிறிது நேரம் பேருந்து முன்பு நின்றிருந்த யானை பேருந்தின் முன்பகுதி கண்ணாடி முன்பு வந்து தடவிப் பார்த்தது. பின்பு இடது புறத்தில் உள்ள ஜன்னல் வழியாக தும்பிக்கையை உள்ளே நுழைக்க முயற்சித்தது. உஷாரடைந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக சாமர்த்தியமாக பேருந்தை மெதுவாக நகர்த்தி கிளம்பியதால், பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

அடிக்கடி யானைகளுக்கு கரும்புகளை உணவாக வழங்கி சிறிது நேரம் நிறுத்திவிட்டு செல்லும் கரும்பு பாரம் ஏற்றி வரும் ஓட்டுனர்களுக்கு வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் உண்பதற்கு ஏற்றவாறு மூங்கில் காடுகள் மரங்கள் நிறைய ஆசனூர் காட்டு வனப்பகுதியில் உள்ளன.  யானைகளுக்கு கரும்புகளை வீசி பழக்கப்படுத்த வேண்டாம். இது மற்ற வாகனங்களுக்கு யானைகளால் ஆபத்து ஏற்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.