'புர்கா' திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்..!!

'புர்கா' திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்..!!

'புர்கா' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சார்ஜுன் இயக்கத்தில் கலையரசன் மற்றும் மிர்னா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திறைப்படம் புர்கா. இத்திரைப்படம் ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியள்ளது. இதில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தடை செய்யக்கோரி இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் சட்டம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் பல முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தும் நிலையில், இஸ்லாம் மார்க்கமே பெண்களுக்கு எதிரானது போல் 'புர்கா' திரைப்படம் சித்தரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது" என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக கூறியுள்ள அவர்  மதவாத சக்திகளின் கையில் அதிகாரம் சிக்கியுள்ளதால், ஒரு குறிப்பிட்ட சமய மக்களை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் போலக் காட்டமுனைவதாக கூறியுள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் எவ்வித தீங்கும் ஏற்படாத வண்ணம் படைப்பாளிகள் தங்களின் கடமையை உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் தங்களது படைப்புகளை வெளிக்கொணர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அவர்  குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென  ரசிகர்களிடம்  கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது 'ஆகா' ஓடிடி இணையதளத்தில் வெளியாகியுள்ள 'புர்கா' திரைப்படம் இசுலாமிய பெருமக்களின் இறை நம்பிக்கையையும், அவர்களின் புனித நூலான குரானையும் இழிப்படுத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து அதனைத் தடைசெய்யக் கோரும் இசுலாமிய மக்களின் கோரிக்கையை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.