புறா கூண்டை கூட விட்டுவைக்காத கொள்ளையர்கள்- சிசிடிவி வைரல்...

திருச்சி அருகே போதையில் புறா கூண்டை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புறா கூண்டை கூட விட்டுவைக்காத கொள்ளையர்கள்- சிசிடிவி வைரல்...

திருச்சி பாலக்கரையை அடுத்த துரைசாமிபுரம் பகுதியில் கடந்த 2 மாதமாக தொடர்ந்து டூவிலர்கள்,சைக்கிள்கள் போன்றவை திருட்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாதது கஞ்சா மற்றும் குடிபோதையில் உள்ள இளைஞர்களே இது போன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனங்கள் போன்ற சில பொருட்களை தாண்டி புறா ,முயல், நாய் குட்டி ஆகிய வளர்ப்புப் பிராணிகளின்  கூண்டுகளை கூட விட்டுவைக்காமல் திருடிச் செல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

அப்படி தான் திருச்சி அடுத்த துரைசாமிபுரம் அருகே உள்ள மதுபானக்கடையில் மது வாங்கிய இளைஞர்கள் மதுகுடித்துவிட்டு, போதையில் அருகில் இருந்த வீட்டின் புறா கூண்டினை லாவகமாக திருடி சென்றனர். இந்த காட்சி அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் தெளிவாக பதிவாகியது.

இந்த திருட்டு சம்பவத்தையடுத்து, தங்களது வீட்டு வாசலில் எந்த ஒரு பொருளையும் வைக்க கூட பயமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திருச்சி பாலக்கரை  காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.