சென்னை விமானநிலையத்தில் ரூ.28.72 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்.!
துபாய் மற்றும் இலங்கையிலிருந்து வந்த பயணிகளின் லேப்டாப்பிற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.28.72 லட்சம் மதிப்புடைய தங்க செயின்கள் மற்றும் எலக்ட்ராணிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 29 வயதான ஆண் பயணி ஒருவர் மீது சுங்கத்துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை நிறுத்து உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் எடுத்து வந்த லேப்டாப்பிற்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றின் மொத்த எடை 635 கிராம் என்பதும் அதன் மதிப்பு ரூ.28.72 லட்சம் என்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் இலங்கையிலிருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையம் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணியின் சூட்கேஸ்க்குள் மறைத்து வைத்திருந்த ரூ.5.66 லட்சம் மதிப்புடையை எலக்ட்ராணிக்ஸ் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை எடுத்து வந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.