மயானத்தில் மின் விளக்கு வசதிகள் இல்லை... செல்போன் ஒளி விளக்கில் இறுதி சடங்கும் செய்யும் அவலம்!!
வாசுதேவநல்லூர் மயானத்தில் மின் வசதி இல்லாததால், செல்போன் வெளிச்சத்தில் இறுதி சங்கு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவல் செல்லும் சாலையில் மயானம் ஒன்று உள்ளது. இந்த மயானத்தை அப்பகுதியை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கால்வாய் கரையோரம் அமைந்துள்ள இந்த மயானத்தில் மின்விளக்கு வசதிகள் என்பது பெயரளவிற்கு கூட இல்லை. இந்நிலையில் மரணம் அடைந்த ஒருவரின் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக, அவரது உறவினர்கள் கொண்டுவந்தனர்.
அப்போது, மயானத்தில் இருள் சூழ்ந்து இருந்ததால், செல்போனில் டார்ச் லைட் அடித்தும், வாகனத்தின் முகப்பு விளக்கை கொண்டும், இறுதி சடங்கை செய்தனர். அத்துடன் மயானத்திற்கு, எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மயானத்திற்கு, மின் விளக்கு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.