மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இந்தாண்டு நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இந்தாண்டு நிதிநிலை அறிக்கையும், விவசாயத் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இந்தாண்டு நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு, இவ்வாண்டு 2 நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்களிடம் கலந்தாலோசித்து, விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையிலும், நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

அதேபோல், பொது நிதிநிலை அறிக்கையினை, பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரை கலந்தாலோசித்து, மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றும், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களிடம் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.