பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக காரணமாக இருந்த சக பள்ளி மாணவி உள்பட 3 பேர் கைது...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக காரணமாக இருந்த சக பள்ளி மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக காரணமாக இருந்த சக பள்ளி மாணவி உள்பட 3 பேர் கைது...

காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் பாதிக்கப்பட்ட சிறுமி படித்து வந்துள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன் அவர்,  தனது வகுப்பில் படிக்கும் தோழியுடன் அருகில் உள்ள அழகு நிலையத்திற்கு புருவம் திருத்தம் செய்து கொள்ள சென்றுள்ளார். நாளடைவில் அந்த அழகு நிலைய பொறுப்பாளரான மேற்குவங்கத்தை சேர்ந்த மனிஸுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  சிறுமி அங்கு செல்லும்போதெல்லாம் மதுவும் வழங்கப்பட்டு, ஆசைவார்த்தைக்கூறி பாலியல் சீண்டலும் நடந்துள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். 

அதன்பேரில் சிறுமியை அழகு நிலையம் அழைத்து சென்ற சக பள்ளி மாணவி,  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  அழகு நிலையத்தில் பணியாற்றிய லெட்சுமி, விக்னேஷ்  ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதில்,  கைதான பள்ளி மாணவி அதே அழகு நிலையத்தில் பணியாற்றிய பெண் ஒருவரின் மகள் என்றும், இதற்கு முன் அவர் பிற மாணவிகளையும் அங்கு அழைத்து சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. இதுவரை  மாணவிகள் 6 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள மனிஸை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளி பருவத்தில் ஆசை வார்த்தைக்கு மயங்கி, மாணவிகள் ஏமாறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களை தீவிரமாக கண்காணிக்க  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.