நீலகிரியில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குக..! உயர்நீதிமன்றம் உத்தரவு

நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விடுமுறை காலங்களில் கடுமையான கட்டுபாடுகள் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

நீலகிரியில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குக..!  உயர்நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்களை  வரன்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு  தடை விதிக்க கோரி  வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்  கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து  கருத்து  தெரிவித்த நீதிபதிகள், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தான் சுற்றுசூழல் மாசு அடைவதாக தெரிவித்தனர்.  சட்டவிரோத ரிசார்ட்கள் நீலகிரியில் அதிக அளவில் உள்ளதாகவும்,சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நச்சு புகை பரவுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

நீலகிரியில் குடியிருப்பு கட்டிடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலாபயணிகள் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.மேலும் நீலகிரியில்  போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.