தக்காளி விலை மேலும் ரூ.10 உயர்வு 

தக்காளி விலை மேலும் ரூ.10 உயர்வு 

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் நேற்று முதல் ரகம் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 10 ரூபாய் உயர்ந்து 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு இன்று தக்காளியின் வரத்து 33 வண்டிகள் மட்டுமே  வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மொத்த விற்பனை சந்தையில் நேற்று முதல் ரகம் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 10 ரூபாய் உயர்ந்து 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் ரகம் தக்காளி ஒரு கிலோ 100 முதல் 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினத்தைவிட 10 ரூபாய் குறைந்துள்ளது. இன்று கோயம்பேடு மொத்த சந்தைக்கு சின்ன வெங்காயம் 600 மூட்டைகள் வந்துள்ளது. இன்றைய தினம் மைசூர் மற்றும் தமிழகத்தில் தேனி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்தும் வெங்காயம் வந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தின் வெங்காயம் தற்போது வர தொடங்கியுள்ள நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை குறையும் என வியாபாரிகள் எனவும் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் இன்று முதல் இரண்டு நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் உள்ள 82 நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் செம்மொழி பூங்கா, மாதவரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், இன்று முதல் நடமாடும் வாகனங்கள் மூலம், தக்காளி கிலோ 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:அகவை 70ல் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்து!